Description
மரணம் அவனை கவ்விச் சென்றுவிட்டது. ஆனால், இரண்டாயிரத்து 400 ஆண்டுகளுக்கு மேலாக அவனுடைய புகழ் இன்றும் நிலைத்து நிற்கிறது. அவன் இல்லாமல் உலக வரலாறே இல்லை. வரலாற்றில் அவனைப் போல் ஒரு வீரனும் இல்லை என்றாகிவிட்டது. ஆம். மாவீரன் என்றால் அது அலெக்ஸாண்டர் தான். அன்றைய கிரேக்கர்கள் அறிந்த உலகின் முக்கால் பாகத்தை தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்தவன். வெறும் 32 வயதுக்குள் இது அவனுக்கு எப்படி சாத்திய மாயிற்று. இந்த வெற்றிக்கு அவன் எப்படியெல்லாம் திட்டமிட் டிருக்க வேண்டும். எவ்வளவு கடினமாக உழைத்திருக்க வேண்டும். இப்படியொரு கனவு அவனுக்கு எப்போது தோன்றியிருக்க வேண்டும். அந்த கனவை கொன்றுவிடாமல் எப்படியெல்லாம் காப்பாற்றி செழுமைப்படுத்தியிருக்க வேண்டும். நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது.
அவனுடைய தாய் ஒலிம்பியா அவனை சாதாரண மனிதன் என்ற நிலையைத் தாண்டி கடவுளின் மகனாகவே கருதி வளர்த்தாள். எல்லோரையும்விட அவன் மேம்பட்டவன் என்ற எண்ணத்தை ஊட்டி வளர்த்தாள். அவளுக்கு அவனைத்தவிர வேறு உலகமில்லை என்றும், உலகமே அவனுக்கு சொந்தமானது என்றும் நம்பவைத்து வளர்த்தாள். பத்து வயதிலேயே அடங்காத குதிரையை அடக்கும் அளவுக்கு புத்தி சாதுர்யமும், மனபலமும் கொண்டவனாக அவன் வளர்ந்தான் என்றால் அதற்கு அவனுடைய தாய் ஒலிம்பியாவின் வளர்ப்புதான் முக்கியமான காரணமாக இருந்தது. தனது தந்தை உருவாக்கிய ராஜ்ஜியத்தைக் காப்பாற்றி, அந்த ராஜ்ஜியத்தின் கீழ் உலகையே கொண்டுவந்த அந்த மாவீரனின் வரலாறு படிக்கப்படிக்க புல்லரிக்கச் செய்யும். படியுங்கள்…
Reviews
There are no reviews yet.