இலக்கியம் என்பது மனித வாழ்வின் இலக்கினை இயம்புவதாக அமைதல் வேண்டும். ஒரு மனிதன் எவ்வாறு வாழவேண்டும், அவன் தன் வாழ்வியல் முறை மூலம் இம்மனித சமூகத்தை கட்டமைப்பது எங்ஙனம்? இம்மனித சமூகம் எதிர்காலச் சந்ததியினர்க்கு எவ்வகையான வழிகாட்டு நெறிமுறைகளைக் காட்ட வேண்டும்? என்பன பற்றிய அக்கறையோடு இலக்கியம் திகழவேண்டும். அதன் அடிப்படையில் எழுதப்பட்டதே இந்த நூலாகும்.
நலம் என்பது உணவில் தொடங்கி உணர்வில் தொடர்ந்து உலகத்தில் நிலைத்தல் வேண்டும். உணவு, உடல், உள்ளம் இவை மூன்றும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையன. உணவு நலமாகும்போது உடல்நலமாகும்; உடல் நலமாகும்போது உள்ளம் நலமாகும். எனவே இப்புத்கதம் உணவு, உடல் மற்றும் உள்ளம் பற்றி மிகுந்த அக்கறையோடு பேசுகிறது. இப்புத்தகமானது நயம்பட உரைக்கப்பட வேண்டும் என்பதற்காக எளிய, சந்த நயத்துடன் கூடிய மரபுக்கவிதைகளில் படைக்கப்பட்டிருக்கின்றது.
நகரத்து வாழ்க்கை – அதுவே மனிதன் வாழவேண்டிய நாகரீக வாழ்க்கை – என நினைத்து நம் முன்னோர்கள் நமக்கு வகுத்தளித்த பண்பாடு, கலாச்சாரம், சமூக மதிப்பீடுகள் அனைத்தையும் இழந்து இன்று ஒரு பொருளற்ற வாழ்க்கை வாழுகின்றோம்; நாகரீகம் என்னும் பெயரில் நஞ்சை அருந்துகிறோம்; உணவே மருந்தென்று வாழ்ந்த நம் தமிழ்ச் சமூகத்தில் நஞ்சே உணவென்று மாறிப்போனது. இது நம் வருங்காலத்திற்கு நாமே அடித்துக்கொள்கின்ற சாவுமணி ஆகும். உணவென்பது மருந்தை உண்பதே அதுவே நாகரீகம், நஞ்சை உண்பதல்ல என்பதை நாட்டிற்கு எடுத்துக் கூறுவதே இந்நூலின் தலையாய நோக்கம் ஆகும். இந்நூல் கலாச்சார ரீதியாக நம் முன்னோர் நமக்கு வகுத்தளித்த உணவு முறைகளையும், அதனால் ஏற்படும் உடல்நலத்தையும், உள்ளத்து நலத்தையும்; வாழ்வியல் நெறிமுறைகளோடு விளக்குகிறது.
Reviews
There are no reviews yet.